புதன், 15 ஜூன், 2011

சபாஷ் கலெக்டர் சார்..

ஈரோடு: ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு

அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!
           வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள்   சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.
           இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
           நாள்: 17.06.2011
           நேரம்: காலை 10.00 மணி

10.06.2011குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம்.
எனது unavuulagam@gmail.com  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.
என் செல் எண் 9442201331.
ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும்.
அவரவர் வலைப்பூவில், அழைப்பிதழை மலர செய்யுங்கள்.
பி.கு:1 . ஆன்  லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.
       
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்,
உணவு உலகம்

திறமைக்கு வறுமை தடையில்லை

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.


சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.

நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'

- அ.ப.இராசா -